கணவனை இழந்து தனியாக குழந்தைகளை வளர்க்கும் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.24 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார்.
மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், மேகாலயாவில் தீவிர பிரச்சாரம் செய்து வரும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிட்டார். அதன்படி, மேகாலயாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் என்றும், அரசு ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/01/nadda-ie-1024x569.jpg)
மேலும், முக்கிய அறிவிப்பாக, பெண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தையின் பெயரில் ரூ.50,000 பத்திரம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார். பெண் குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வியும், கணவனை இழந்து தனியாக குழந்தைகளை வளர்க்கும் பெண்களுக்கு ஆண்டுக்கு 24 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். முன்னதாக, பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சி சார்பிலும் பெண்களுக்காக பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டன.