தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் செவ்வாழை ராசு. இவருக்கு வயது 70. பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த இவர், உடல் நலக்குறைவால் காலமானார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்திருக்கிறார் செவ்வாழை ராசு. கந்தசாமி, மைனா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யாவின் சகோதரர் கார்த்திக். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் படங்கள்தான். அவரது முதல் படம் பருத்தி வீரன். இயக்குனர் அமீர் இயக்கியிருந்தார். 2007ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் பருத்திவீரன். நடிகை பிரியாமணியின் இப்படத்தில் முத்தழகு வேடத்தில் நடித்ததற்காக தேசிய விருதை வென்றார்.
இந்த படத்தில் ப்ரியாமணி, பொன்வண்ணன், சரவணன், சுஜாதா, கஞ்சா கருப்பு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். மேலும், இந்த படத்தில் நடித்து தன் குரலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் செவ்வாழை ராசு. விவசாய குடும்பத்தை சேர்ந்தவரான ராசு, திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய பிறகு செவ்வாழை ராசு என அழைக்கப்பட்டார். நான் சிவப்பாக இருந்ததால் செவ்வாழை ராஜு என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அப்படி தான் எனக்கு இந்த பெயர் வந்தது. எங்கள் குடும்பம் விவசாயம் குடும்பம். நாங்கள் ஆரம்பத்தில் விவசாயம் தான் செய்து கொண்டிருந்தோம் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே தான் இவர் நடித்த முதல்படம். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான இவர், அரசியலில் சாதிக்கவும் முயற்சி செய்தார். பின்னர் திரைத்துறையில் தடம் பதித்தார். பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். நடிகர் மனோ பாலா சமீபத்தில் மறைந்ததை அடுத்து திரையுலகினர் சோகத்தில் ஆழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.