கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல கொரியன் பாப் இசை பாடகர் லீ ஜிகானும் மரணமடைந்துள்ள செய்தி வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு தென்கொரிய தலைநகர் சியோலில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், நடைபெற்ற ஹாலோவீன் நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 150-க்கும் அதிகமானோர் உயிரிழந்தது உலக நாடுகளை அதிர வைத்தது. இந்த ஹாலோவீன் திருவிழாவில் அதிகப்படியான இளம் பெண்கள், குழந்தைகள், முதியோர் பங்கேற்றது தெரியவந்த நிலையில், இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல கொரியன் பாப் இசை பாடகர் லீ ஜிகானும் மரணமடைந்துள்ள செய்தி வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பாப் இசை பாடகர் லீ ஜிகானுக்கு 24 வயது. பாப் பாடகராக மட்டுமல்லாமல் தேர்ந்த நடிகராகவும் லீ ஜிகான் இருந்துள்ளார். ப்ரொடியூஸ் 101 என்கிற ரியாலிட்டி ஷோவில் லீ பங்கேற்று அதிகளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்றிருந்தார். தென்கொரியாவில் ஹாலோவீன் எனப்படும் பேய் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாத இறுதியில் நடைபெறுவது வழக்கம். தென்கொரிய மக்கள் ஆர்வமுடன் கொண்டாடும் இந்த திருவிழாவைக் காண வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிவார்கள். மதசார்பற்ற வகையில் அனைத்து மக்களும் சேர்ந்து அகால மரணம் அடைந்தவர்களை மகிழ்விப்பதற்காக கொண்டாடும் ஒரு திருவிழாவாகும். இந்த ஆண்டு வழக்கம் போல திருவிழா நடந்த நிலையில், பேய் வேடமணிந்த மக்கள் கூட்டம் குறுகிய தெரு ஒன்றில் திடீரென அதிகரித்ததால், பலரும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

இந்த கூட்ட நெரிசலில் இதுவரை பலி எண்ணிக்கை 150-யைத் தாண்டியுள்ளது. கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தி வந்ததால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹாலோவீன் திருவிழா நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இறந்தவர்களை மகிழ்விக்க நடைபெற்ற இந்த திருவிழாவில் இவ்வளவு மக்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஹாலோவீன் நிகழ்ச்சியின் போது உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த, அந்நாட்டு அதிபர் யுன் சுக் இயோல் நாடு முழுவதும் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளார்.