கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் கடந்த 6ம் தேதி உருவான பிபர்ஜாய் புயல் ஜக்காத் துறைமுகம் அருகே இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரையில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த புயலை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள் சார்பாக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் குஜராத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடலோர மாவட்டங்களைச் சார்ந்த 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்த புயலின் தாக்கம் காரணமாக சௌராஷ்ட்ரா கட்ச் பகுதியில் நேற்று முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கடலில் அதிக சீற்றம் காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில அரசு சார்பாக காந்திநகரில் அவசர கால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை அங்கு சென்ற குஜராத் முதல்வர் பூபேந்திரப்படேல் அவசர கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு நடத்தினார். அதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனையை நடத்தி இருக்கிறார்.