‘மாண்டஸ்’ புயல் காரணமாக எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ’மாண்டஸ்’ புயல், இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள கடற்கரை பகுதியில் கடற்கரை அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக மேடான பகுதிகளில் நிறுத்தி வைக்கும் பணியில் இறங்கியுள்ளனர். எண்ணூர் விரைவு சாலை, பாரதியார் நகர் பகுதியில் கடல் அலை சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. அத்துடன், கடல் அலை தடுப்பு கற்களைத் தாண்டி சாலையில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீதும், மாநகரப் பேருந்து மீதும் விழுகிறது.

இதனால் சாலையில் சிறு சிறு கற்கள் மற்றும் குப்பை கூளங்களாகக் காட்சியளிக்கிறது. இதையடுத்து, சாலையில் இருக்கும் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். நேற்று முதல் கடலின் சீற்றத்தின் காரணமாக சிறுவர்கள் இளைஞர்கள் என கடல் அலையில் சீற்றத்தை செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். அதனால் இந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கடற்கரை ஓரம் வருபவர்களை எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர். எண்ணூர் வடக்கு பாரதியார் நகர் பகுதியில் கடற்கரை ஒட்டிய வீடுகளின் மீது கடல் அலை சீற்றத்துடன் வீசி வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.