பிரபல எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லதுரை பிக்பாஸ் சீசன் 7இல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். 61 வயதான இவர், பிக்பாஸ் வீட்டில் முதல் வாரத்திலேயே நாமினேஷனில் வந்திருக்கும் நிலையில், முதல் நாள் இரவே அவர் சொன்ன அந்த ஓட்டம் கதை ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. பவா செல்லதுரை ஏகப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். அதே போல பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் மறைந்த பாலு மகேந்திரா முதல் இயக்குநர் பாலா, ஷங்கர், மிஷ்கின் என பலரும் இவருடன் நட்பு பாராட்டி வந்துள்ளனர்.
பவா செல்லதுரைக்கு திருவண்ணாமலையில் பத்தாயம் எனும் ஒரு பண்ணை வீடு இருக்கிறது. அந்த இடத்திற்கு தான் சினிமா இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், எழுத்தாளர்கள் என பலரும் படையெடுத்து வருவார்களாம். ஜெயம் ரவி நடித்த பூலோகம் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் ஜோக்கர், சீதக்காதி, பேரன்பு, குடிமகன், சைக்கோ, வால்டர், நவரசா, ஜெய்பீம், வெந்து தணிந்தது காடு, ரெஜினா மற்றும் பரம்பொருள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பவா செல்லதுரையின் பண்ணை வீட்டில் பரதேசி படத்தில் பாலா பயன்படுத்திய வண்டி உள்ளிட்ட பல அரிய கலை பொருட்கள் உள்ளன. எழுத்தாளர்கள், இயக்குநர்கள் என பலரும் அங்கே வந்து தங்கி கதைகளை பேசி மகிழ்வார்கள் என பேட்டி ஒன்றில் தனது பத்தாயத்தை சுற்றிக் காட்டி பவா செல்லதுரையே கூறியுள்ளார். பவா செல்லதுரை விவசாயத்தையும் பார்த்து வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு.
மறைந்த இயக்குநர் பாலு மகேந்திரா பவா செல்லதுரையின் எழுத்துக்களை விட அவரது கதை சொல்லல் சிறப்பானதாக உள்ளது என பாராட்டியுள்ளார். பாலுமகேந்திரா வந்து சென்ற இடம் என்பதற்காகவே அவரது சிஷ்யன் பாலா வந்து செல்வார். மேலும், மிஷ்கின், நாசர், ஷங்கர் உள்ளிட்ட பலரும் இங்கே வருவார்கள் எனக் கூறி வியப்பில் ஆழ்த்துகிறார் பவா செல்லதுரை. தற்போது பிக்பாஸ் போட்டியாளராக மாறியுள்ள அவர், பல இயக்குநர்களுக்கு ஆசானாகவும் நல்ல நண்பராகவும் திகழ்ந்தவரா என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் அவரது வீடியோக்களை யூடியூப்களில் பார்த்து வருகின்றனர்.