கனமழை காரணமாக இன்று நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..
நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. அந்த வகையில் தமிழகத்திலும் கனமழை பெய்து வருகிறது.. தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கோவை, நீலகிரி, நாமக்கல், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.. நாகை மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை தொடர்ந்து வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..
இதே போல் கனமழை காரணமாக திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
இதனிடையே இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..