தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சென்னை உள்பட 19 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழையானது ஜூலை 6ஆம் தேதி வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு 42 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அரக்கோணத்திலிருந்து வந்தடைந்துள்ளனர்.
இதில் 20 பேர் கொண்ட குழு கூடலூர் பகுதிக்கு சென்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளதாகவும், அதிகம் பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்ட கூடலூர் பகுதிக்கு 20 பேர் கொண்ட குழு சென்றுள்ளதாகவும், மற்றொரு 20 பேர் கொண்ட குழுவினர் மஞ்சூர் செல்ல உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்கள் அபாயகரமான இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளதாகவும், 43 பேரிடர் முகாம்கள் தயார் நிலையில், உள்ளதாக ஆட்சியர் கூறியுள்ளார். மேலும், மழையை காட்டிலும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அதனை சார்ந்த பணிகளை துரிதப்படுத்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினரை அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.