தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மேற்கு பகுதியில் நல்ல மேகக்கூட்டங்கள் உருவாகியிருக்கிறது. கிழக்குப் பகுதியில் இருந்து மேகக்கூட்டங்களுக்கு காற்று சென்று கொண்டிருக்கிறது. இதனால், இது புயலாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதே போல இன்று கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர் தொடங்கி புதுக்கோட்டை வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் பொதுமக்களுக்கு தடையின்றி ஆவின் பால் கிடைக்க ஆவின் பாலகம் தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதுதொடர்பாக ஆவின் நிர்வாகம் சார்பில் கூறுகையில், ”சென்னையில் 8 இடங்களில் 24 மணிநேரமும் ஆவின் பாலகங்கள் இயங்க உள்ளது. அதன்படி, மாதவரம் பால்பண்ணை பாலகம், பெசன்ட் நகர் பாலகம், வண்ணாந்துறை பாலகம், அம்பத்தூர் பால்பண்ணை கேட் பாலகம், அண்ணா நகர் அட்நஸ் டவர் பூங்கா பாலகம், சோழிங்கநல்லூர் பால்பண்ணை பாலகம், விருகம்பாக்கம் பாலகம், மயிலாப்பூர் சிபி ராமசாமி சாலை பாலகமும் ஆகியவை 24 மணி நேரம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் பால் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனால் ஒருவருக்கு அதிகபட்சமாக 4 பால் பாக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். தேவையான அளவு ஆவின்பால் பவுடர் மற்றும் யூஎச்டி பால் ஆவின் பாலகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட கூடுதலாக ஆவின் பால் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் தேவைப்படும் இடங்களில் தற்காலிக பால் விற்பனை நிலையங்கள் அமைத்து பால் மற்றும் பால் பவுடர் விநியோகிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : டைட்டானிக் கப்பல் மூழ்கிய ஆண்டு..!! உலகின் மிக வயதான மனிதர் காலமானார்..!! ஆயுளின் ரகசியம் என்ன..?