தமிழ்நாட்டில் நவம்பர் 6ஆம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக, இலங்கை முதல் வடதமிழகம் வரை நீடித்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி கடலோரப் பகுதியில் இருந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தரைப் பகுதிக்குள் நேற்று முன்தினம் மாலை நகரத் தொடங்கியது. அதனால், டெல்டா மாவட்டம் முதல் வடதமிழகம் வரை நேற்று முன்தினம் மாலையில் தொடங்கி நேற்று பகல் முழுவதும் மழை பெய்தது. இன்னும் சில இடங்களில் மழை தொடர்கிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் நவம்பர் 6ஆம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் தமிழக கடலோர பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நேற்று மிக கனமழை பெய்த நிலையில் 5 நாட்களுக்கு கனமழையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.