மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நாளை ஐப்பசி சதய நட்சத்திரம், ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 1,037-வது சதய விழா இன்று காலை மங்கல இசையுடன் தொடங்கியது. இந்நிலையில், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதனை ஏற்று இந்த ஆண்டு முதல் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”மாமன்னர் சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும் இனிவரும் ஆண்டுகளிலும் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாடப்படும். மேலும், தஞ்சாவூரில் உள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.