ஒரு பெண்ணின் காதலுக்காக இரு இளைஞர்கள் நள்ளிரவில் சண்டை போட்ட சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் சியோனியில் உள்ள பர்கத் நாகா என்ற பகுதியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு இரு இளைஞர்கள் நடுரோட்டில் தகராறு செய்து கொண்டிருந்தனர். அங்கு ஒரு இளம் பெண்ணும் நின்றுகொண்டிருந்தார். இதனைப் பார்த்த அங்கிருந்த நபர் ஒருவர், போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார், சண்டையிட்டுக் கொண்டிருந்த அந்த இரு இளைஞர்களையும் பிடித்து விசாரித்தனர். அந்த இளைஞர்களில் ஒருவரின் பெயர் மோஹித் மற்றொருவரின் பெயர் சுபம்.
இருவரும் இதே பகுதியில் வசிக்கும் நிலையில், அங்கு நின்று கொண்டிருந்த இளம்பெண்ணுடன் இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இரு இளைஞர்களிடமும் அந்த பெண் தனித்தனியே பேசி பழகி காதலிப்பதாக கூறியுள்ளார். இந்த விவரம் அந்த இரு இளைஞர்களுக்கு தெரியாது. இந்நிலையில், சம்பவம் நடந்த சனிக்கிழமை அன்று இரவு இரு இளைஞர்களும் ஒரே நேரத்தில் பெண்ணை ரகசியமாக பார்க்க வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது தான் இந்த முக்கோண காதலின் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் இந்த பெண்ணின் காதல் யாருக்கு உரிமையானது என நள்ளிரவில் நடு ரோட்டில் நின்று ரகளை செய்துள்ளனர். சம்பவம் தெரிந்து போலீசார் சமாதானம் செய்து பார்த்த போதும், இவர்களின் தகராறு ஓய்ந்தபாடில்லை. பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த போலீசார், இளைஞர்கள் இருவரையும் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.