கேரள மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவனந்தபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் அதி கனமழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், கண்ணூர், வயநாடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் 1ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. முதலில் லேசான அளவு மழை பெய்துவந்த நிலையில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கனமழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.
![11 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு..! அதி கனமழை எச்சரிக்கையால் நடவடிக்கை..](https://1newsnation.com/wp-content/uploads/2020/12/heavy-rain-1573288538-1024x576.jpg)
கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 49 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 757 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவனந்தபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, மகாத்மா காந்தி, காலடி உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் இன்று நடைபெறவிருந்த தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.