கள்ளக்காதல் விவகாரத்தில் பாமக மகளிரணி நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி சண்முகத்தாய் (70). இவர்களது மகள் மாரியம்மாள். இவர் குருவிகுளம் யூனியன் பாமக மகளிர் அணி தலைவியாக இருந்து வந்தார். மேலும், இவர் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலவன்குளம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளம் அருகில் மாரியம்மாள் இறந்து கிடந்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாரியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் மாரியம்மாளை முத்துகாலாடி (57) மற்றும் அவரது நண்பர் சுப்பையா பாண்டியன் (58) என்பவரோடு சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், எனக்கும், மாரியம்மாளுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. ஆனால், திடீரென என்னுடனான கள்ள உறவைத் துண்டித்துவிட்டு மாரியம்மாள் இன்னொரு வாலிபருடன் பழகி வந்தார். இதனால், ஆத்திரமடைந்து கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய இருவரையும் போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.