தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் உடற்கல்வி வழங்கும் வகையில் விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர் சுபாஷ் சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், உடற்கல்வி என்பது மாணவர்களின் மேம்பாட்டுக்கு முக்கியமானது எனவும், தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன? எனவும், எத்தனை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர்? என்பன உள்ளிட்ட விவரங்களை வழங்கக் கோரி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த தகவல்களை வழங்க மறுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
![எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன..? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு](https://1newsnation.com/wp-content/uploads/2022/06/202111071630320830_Rain-damage-in-Chennai-15-IAS-officers-appointed_SECVPF.jpg)
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, ”தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.