நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே முனாங்காடு பகுதியில், காற்று நிரப்பப்பட்ட ரப்பர் படகு ஒன்று இன்று காலை கரை ஒதுங்கியது. இதுபற்றி தகவலறிந்த கடலோர காவல்படை காவல்துறையினர், விரைந்து வந்து அந்த ரப்பர் படகை சோதனையிட்டனர். சேதனை சொய்ததில் அந்த படகு சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது.
மேலும் கரை ஒதுங்கிய அந்த படகு பதிமூன்று அடி நீளமும், மூன்று அடி அகலமும் கொண்டது. அந்த படகில், படகு துடுப்பு, லைஃப் ஜாக்கெட், தண்ணீர் பாட்டில்கள்,டிராவல் பேக், ஒரு ஜோடி காலணிகள் ஆகியவை இருந்தன. இதற்கிடையில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் கடற்படை அதிகாரிகள் அந்த பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். நாகையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
மோப்ப நாய் படகை மோப்பம் பிடித்து அருகில் இருந்த காட்டுப் பகுதிக்குள் சென்றது. இலங்கையில் இருந்து காற்று நிரப்பப்பட்ட ரப்பர் படகில் மர்ம நபர்கள் யாராவது வேதாரண்யத்தில் நுழைந்துள்ளார்களா, அல்லது கடத்தல்காரர்கள் யாரேனும் வந்தார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.