கொரோனா வைரஸை தொடர்ந்து நிஃபா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், வைரஸ் தொற்றை கண்டறிவது எப்படி? பரவாமல் தடுப்பது எப்படி? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நிஃபா வைரஸின் அறிகுறிகள் என்னென்ன?
மற்ற வைரஸ் காய்ச்சலைப் போலவே நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, அசதி, இருமல், குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. மூளை, சிறுமூளை, நரம்பு மண்டலப் பாதிப்புகளால் அயர்ச்சி ஏற்படும். நிலை தடுமாறும், மனதில் குழப்பம், சிலருக்கு வலிப்பும் ஏற்படலாம். பார்வைக் கோளாறும் ஏற்படலாம்.
இறுதியில், மயக்க நிலை அடைந்து மரணம் ஏற்படும். இந்தத் துயர நிலை, நரம்பு பாதிப்பு ஏற்பட்ட ஓரிரு நாட்களிலேயே சம்பவித்துவிடும். நிஃபா வைரஸின் அடைகாக்கும் காலம் 4 முதல் 14 நாட்கள் ஆகும். இந்த கடுமையான நோயால் சுமார் 40% நோயாளிகள் தங்கள் உயிரை இழக்க நேரிடும்.
நிஃபா வைரஸை கண்டறியும் முறைகள் :
நிஃபா வைரஸ் தொற்றைக் கண்டறிய எலிஸா பரிசோதனைகள் உள்ளன. மேலும், பிசிஆர் பரிசோதனை மூலமும் இதனை உறுதி செய்யலாம். ஆனால், இந்த பரிசோதனை புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிலையத்தில் மட்டுமே செய்ய முடியும். இந்தப் பரிசோதனைக்கு ரத்தம், சிறுநீர், முதுகிலிருந்து பெறப்படும் தண்டுவட நீர், சளி, உமிழ்நீர், தொண்டை மற்றும் நாசிப்பகுதி நீர் ஆகியவை பயன்படுத்தப்படும்.
மருத்துவ சிகிச்சைகள் :
நிஃபா வைரஸ் காய்ச்சலை ஏற்படுத்தும் பிரத்தியேகமான வைரஸுக்கு எதிராகச் செயல்பட்டு அவற்றை அழிக்கவோ, அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவோ இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு தற்போது ரிபாவிரின் (Ribavirin) என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. இந்த நிஃபா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆதரவான கவனிப்பு சிகிச்சையின் முக்கிய அம்சமாகும். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை கண்காணிப்பு தேவைப்படலாம். நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்பைத் தவிர்ப்பது மற்றும் நோயுற்றவர்களைச் சந்தித்த பிறகு கைகளை நன்கு கழுவுதல். மருத்துவமனைகளுக்குள் தொற்று பரவாமல் தடுக்க தடுப்பு நர்சிங் மற்றும் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இன்றியமையாதவை.