புதுக்கோட்டை மாவட்டம் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, அம்மாவட்ட ஆட்சியர் மா.செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரும் 11ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 08.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில், பல்வேறு துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டல், சுயதொழில், வங்கி கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்பட உள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். வேலைதேடும் இளைஞர்கள் “தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்’ (Tamil Nadu Private Job Portal) www.tnprivatejobs.tn.gov.in வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.