கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 47 வயது பெண் ஒருவர், தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும், பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர், இப்பெண்ணுக்கு அடிக்கடி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டதால் பாதிக்கப்பட்ட பெண், தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். பின்னர் குடும்பத்தினர் மற்றும் ஊரின் பெரியவர்கள் அந்த இளைஞரை அழைத்து கண்டித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த இளைஞர் அந்த பெண்ணை பழிவாங்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி, கடந்த 13ஆம் தேதி அப்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து, வீட்டிற்குள் நுழைந்த இளைஞர், அப்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், பெண்ணின் கழுத்து, தலை, மார்பு பகுதிகளில் சரமாரியாகத் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். மாலை நேரத்தில் வீடு திரும்பிய குடும்பத்தினர் பெண் மயங்கிய நிலையில், கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோடு, சம்பவம் தொடர்பாக திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மருத்துவ பரிசோதனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அம்பலமானது. சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தவறை மறைக்கவே கொடூரமாகத் தாக்கியதாகவும்’ கூறியதாகத் தெரிகிறது. இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண், உயிரிழந்ததால் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.