சேலம் மாவட்டம் நல்லியாம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பையன். இவருடைய மகன் ஆறுமுகம் (35). இவருடைய மனைவி பிரியா (22). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தையும், 8 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளது. கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி, வீட்டில் பிரியா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால், தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக பிரியாவின் பெற்றோர் பனமரத்துப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதற்கிடையே, திருமணமான 4 ஆண்டுக்குள் பிரியா தற்கொலை செய்து கொண்டதால் சேலம் ஆர்டிஓ மற்றும் போலீசாரும் இணைந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் 2 மாதங்களுக்கு பிறகு பிரியாவின் தற்கொலைக்கு அவரது கணவர் ஆறுமுகம் தான் காரணம் என தெரியவந்தது. கூலிவேலை செய்து வரும் ஆறுமுகம், அண்ணியுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று அவரது அண்ணியுடன் உல்லாசமாக இருந்ததை மனைவி பிரியா நேரில் பார்த்துள்ளார். இதுகுறித்து கணவரை கேட்ட போது, மனைவியிடம் தகராறு செய்து விட்டு ஆறுமுகம் வெளியே சென்று விட்டார். இதனால், மனமுடைந்த பிரியா தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.