இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கோப்பை 2023-க்குப் பிறகு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கிரிக்கெட் வீரர் குயின்டன் டி காக் அறிவித்துள்ளார். இது தென்னாப்பிரிக்க ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்த சில நிமிடங்களில் டி காக்கின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டி காக் 2013ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு அறிமுகமானதில் இருந்து 140 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 17 சதங்கள் மற்றும் 29 அரைசதங்களுடன் 44.85 சராசரியுடன் 5,966 ரன்கள் எடுத்துள்ளார். டி காக்கின் முடிவு ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.
ஆனால், டி20 மற்றும் ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் தனது வாழ்க்கையை நீடிக்க அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம். அவர் ஏற்கனவே 54 போட்டிகளில் விளையாடி 38.82 சராசரியில் 6 சதங்களுடன் 3300 ரன்கள் எடுத்த பிறகு 2021ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். டி காக் சமீபத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக கையெழுத்திட்டார். டிசம்பர் 10-21 முதல் இந்தியாவுக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் டி20 தொடருடன் இணைந்து பிக் பாஷ் லீக்கில் அறிமுகமாக உள்ளார்.