தகன மேடையில் முட்டாள் கிளப் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ராயியா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் முட்டாள் கிளப் (Idiot Club) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மூடநம்பிக்கைகள், ஊழல், போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக போராடி வருகின்றனர். இவர்கள் சமுதாயத்தின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்த அமைப்பை கடந்த 25 வருடங்களுக்கு முன்பாக ராஜீந்தர் ரிக்கி என்பவர் உருவாக்கினார்.

அப்போது தகன மேடையில் கேக் வெட்டி அவர் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடினார். இதை நினைவு கூறும் விதமாக 2022ஆம் ஆண்டு முடிவடைவதை தகன மேடையில் வைத்து கேக் வெட்டி அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கொண்டாடியுள்ளனர். அப்போது ஹிந்தி பாடல்களுக்கு அவர்கள் நடனமும் ஆடினர். மேலும், சமூக நலன்களுக்கு எதிரான விஷயங்களை எதிர்த்து போராடும் நோக்கத்தில் தகன மேடையில் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடியதாக அவர்கள் தெரிவித்தனர்.