அதிமுக பொதுக்குழுவை கூட்டியதில் கட்சி விதிகள் மீறப்பட்டிருந்தால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, அதிமுக பொதுக்குழுவை கூட்டியதில் கட்சி விதிகள் மீறப்பட்டிருந்தால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் எனக் கூறிவிட்டு, அந்த பதவியை கலைத்துவிட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கியது ஏன்? பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா? என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த எடப்பாடி தரப்பு, “கட்சி விதிப்படி பொதுக்குழுவுக்கு தான் உட்சபட்ச அதிகாரம் உள்ளது. ஜூலை 23 பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டிலும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவில்லை. செயற்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நியமனங்களுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் பதவியை கலைத்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்ட போதும் தேர்வு நடைமுறைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இல்லாவிட்டால், பொருளாளர், தலைமை கழக செயலாளர் கட்சியை நிர்வகிக்க விதிகள் வகை செய்கிறது. பொதுக்குழுவுக்கு தலைமை கழக நிர்வாகிகள் அழைப்பு விடுத்ததில் தவறில்லை” என்றும் தெரிவித்தனர்.