மைனர் பெண்ணை காதலித்து திருமணம் செய்ததாக, இளைஞருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் செல்வபுரத்தை சேர்ந்த சூரஜ் என்பவர் அதேப் பகுதியைச் சேர்ந்த பெண்ணை கடந்த 2019ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு கடந்த 2020இல் குழந்தையும் பிறந்துள்ளது. திருமணத்தின் போது அந்தப் பெண் 18 வயதை பூர்த்தி அடையவில்லை எனக்கூறி, பெண்ணின் தாயார் அளித்த புகாரால் சூரஜ் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சூரஜ் தாக்கல் செய்த மனு, நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தனது குழந்தையுடன் ஆஜரான அந்தப் பெண், சூரஜை மணமுடித்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார். மேலும் தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையை சுமூகமாக பேசி தீர்த்து கொண்டதாக பெண்ணின் தாயாரும் தெரிவித்தார். இவற்றை ஏற்ற நீதிபதி, இருவரின் தனிப்பட்ட விவகாரம் என்பதாலும், இளம் வயதுடையவர்களாக இருப்பதாலும், வழக்கை தொடர்ந்து நடத்துவது அவர்களின் வாழ்க்கையில் மன உளைச்சலையே ஏற்படுத்தும் எனக்கூறி, சூரஜ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.