மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது, நல்லவர்களுக்கு தான் குழுந்தை பிறக்கும் என சித்தா மருத்துவர் ஷர்மிகா இணையத்தில் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வந்த நிலையில், தவறான தகவலை கூறுவதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதை அடுத்து இந்திய மருத்துவ இயக்குனரகம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
நல்ல மனது உள்ளவர்களுக்கு தான் குழந்தை பிறக்கும், நுங்கு சாப்பிட்டால் மார்பகங்கள் பெரிதாகும், குப்புறப்படுத்தால் மார்பக புற்றுநோய் வரும், மாட்டுக்கறி சாப்பிட்டால் பல நோய்கள் வரும், ஒரு குலோப் ஜாமுன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும், முகம் பொழிவு பெற தினமும் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட வேண்டும் என பல்வேறு கருத்துகளை யூடியூப்பில் சித்தா மருத்துவர் ஷர்மிகா பகிர்ந்து வந்தார். இந்த கருத்துகள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், இதனை நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர்.

இதையடுத்து, தான் சொன்ன கருத்துகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்தா மருத்துவர் ஷர்மிகா விளக்கம் அளித்திருந்தார். அதில், நானும் மனுஷிதானே. தவறுகள் நடக்கத்தான் செய்யும். இதை யாராவது தவறா எடுக்கிட்டா மன்னிச்சுருங்க என கேட்டுள்ளார். மேலும், நுங்கு சாப்பிட்டால் மார்பகம் வளரும்னு சொல்லிருந்தேன். நுங்கு சாப்பிட்டால் குளிர்ச்சி. அதை சாப்பிட்டால் உடல் எடை கூடும். உடல் எடை கூடினால் மார்பகங்களும் வளரும்னுதான் சொன்னேன் என விளக்கம் அளித்தார். மேலும், இனிப்பு சாப்பிட்டால் எடை கூடும் அதை வைத்து தான் ஒரு குலோப் ஜாமுன் சாப்பிட்டா 3 கிலோ எடை கூடும்னு ஒரு ப்ளோல சொல்லிட்டேன் என தெரிவித்திருந்தார்.
கடந்த சில நாட்களாகவே சித்தா மருத்துவர் ஷர்மிகா இணையத்தில் தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு புகாரும் எழுப்பப்பட்டது. இந்நிலையில், சித்தா மருத்துவர் ஷர்மிகா தொடர்பாக புகார் எழுந்ததை அடுத்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க மருத்துவர் ஷர்மிகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.