கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் ஃபேஸ்புக் மூலம் பழகிய நபர் ஒருவர், தனக்கு விலை மதிப்புமிக்க பரிசு பொருள்களை பார்சலில் அனுப்பி தருவதாக கூறி சுமார் 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்திருந்தார். முகநூலில் பழக்கமான நபருடன் மிகவும் நட்பாக அந்தப் பெண் பழகி வந்துள்ளார். இதனிடையே, அந்தப் பெண்ணிற்கு பரிசளிப்பதற்காக தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வாங்கியுள்ளதாகவும் அதனை பார்சலில் அனுப்பி வைப்பதாகவும் அந்த நபர் கூறியுள்ளார். அதனை நம்ப வைப்பதற்காக வீடியோ காலில் பொருட்களை வாங்குவது போல் செய்துள்ளார். இந்த பார்சல் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து அங்கிருந்து கொரியர் மூலம் வீட்டிற்கு வரும் என கூறியுள்ளார் அந்த நபர்.
இதனிடையே, கஸ்டம் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக அந்தப் பெண்ணிற்கு போன் வந்துள்ளது. ‘உங்களுக்கு பார்சல் ஒன்று வந்துள்ளது. அதற்கு டாக்ஸ் ஆக 10000 ரூபாய் செலுத்த வேண்டும்’ என போனில் அதிகாரி போல் பேசிய நபர் கூறியிருக்கிறார். அந்த பெண்ணும் 10 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்திருக்கிறார். இருப்பினும், நேரில் வந்துதான் பார்சலை பெற முடியும் என்று கூறியிருக்கிறார் போனில் பேசிய நபர். இதனையடுத்து, அந்தப் பெண் திருவனந்தபுரம் விமான நிலையம் அருகே சென்றிருக்கிறார். அப்போது, அதிகாரி போல் நடித்த அந்த நபர், ‘பார்சலில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான டாலர்கள் இருக்கிறது’ இதனை தர முடியாது. இதனை கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு தனியாக பணம் கட்ட வெண்டும் என்று கூறியிருக்கிறார். உடனடியாக தனது ஃபேஸ்புக் நண்பருக்கு போன் செய்து பணம் அனுப்பினீர்களா என்று அந்தப் பெண் கேட்க, அதற்கு ‘ஆம், உனக்கு தொழிலில் ஏதோ கஷ்டம் என சொன்னாய் அல்லவா அதற்காகத்தான் அனுப்பியிருக்கிறேன். அவர்கள் சொல்லும் பணத்தை கட்டி வாங்கிக் கொள்’ என்று கூறியிருக்கிறார். அந்தப் பெண் 10 லட்சம் ரூபாயை கட்டியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு சந்தேகம் வரவே, தனக்கு எதுவும் வேண்டாம், தான் கட்டிய பணம் அனைத்தையும் கொடுத்துவிடுங்கள் என கேட்டிருக்கிறார். கட்டிய பணத்தை எல்லாம் திருப்பித் தர வேண்டும் என்றால் அதற்கு பணம் கட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அவர் பணம் கட்டம் மொத்தம் ரூ21.5 லட்சத்தை அந்தப் பெண் இழந்து இருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்து விரக்தி அடைந்து அவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.