சென்னை மாநகராட்சியின் 132 பள்ளிகளில் 20 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் 792 கழிவறைகள் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த வகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான கழிவறைகளை கட்டுவதற்கு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உள்ள கழிவறைகளை கணக்கிடப்பட்டு 25 மாணவர்களுக்கு ஒரு கழிவறை என்ற அடிப்படையில் கழிவறைகள் கணக்கீடப்பட்டு தேவையான எண்ணிக்கையில் கூடுதலாக கட்டப்பட்டு வருகிறது. அந்தவகையில், புதிதாக 18.87 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு கட்டங்களாக, சென்னை மாநகராட்சியின் 132, நடுநிலை, மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 20 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் 792 கழிவறைகள் கட்டப்பட உள்ளன.

சென்னை மாநகராட்சியின் 159 பள்ளிகளில் வயது வந்த பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான 225 நவீன கழிப்பறை கட்டப்படவுள்ளது. இரண்டு கட்டங்களாக இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ள நிலையில் முதல் தொகுதியில் முதற்கட்டமாக 6.52 கோடி ரூபாய் மதிப்பில் 100 பள்ளிகளிலும், இரண்டாம் கட்டத்தில் 7.27 கோடி ரூபாய் மதிப்பில் 91 பள்ளிகளிலும் கட்டப்பட உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்ற திட்டத்தின் கீழ், குற்றங்கள் அதிகம் நடைபெற்ற இடங்களில் பாதுகாப்பு பணியை மேம்படுத்தி, பெண் காவலர்கள் ரோந்து பணி மேற்கொள்ள வாகனங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அதிகப்படுத்துதல், பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான நவீன கழிவறைகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிர்பயா நிதியின் கீழும் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில், முதற்கட்டமாக பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு கழிவறை கட்டும் பணிகள் மேற்கொள்ள இன்று தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.