வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 360 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் குறைந்ததால், இது புயலாக வலுபெறாது என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த புயலுக்கு பெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் ஆனது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை (நவ.30) பிற்பகலில் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும்.
இதன் காரணமாக வடதமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். மேலும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.