தமிழக அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் கல்வி உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் 7-ஆம் தேதி அன்று மாணவிகளின் வங்கி கணக்கு மூலம் நேரடியாக செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதுபற்றி சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை, அரசு கூடுதல் முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோளிகர் வெளியிட்டுள்ள அரசாணை கீழ் கண்டவாறு;-
தமிழகத்தில், ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறையின் இயக்குனர் கடிதத்தை தமிழக அரசு கவனமுடன் பரிசீலித்து அவரின் கருத்துருவை ஏற்று கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பித்து ஆணையிடுகிறது. அதில், ஏற்கனவே திட்டத்தில் இருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து முடித்த பிறகு அவர்கள் உயர்கல்வி படிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் போது மாதந்தோறும் 1000 ரூபாய் பணம் மாணவிகளுக்கு வழங்கப்படும். இந்த பணம் ஒவ்வொரு மாதமும் 7-ஆம் தேதி மாணவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த மாணவிகள் மற்ற கல்வி உதவித் தொகைகளுடன் இதற்கும் தகுதி உடையவர்களாக இருப்பார்கள்.
இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் சுமார் ஆறு லட்சம் மாணவிகள் பயன்பெறுவர். இந்த புதிய திட்டத்திற்காக, பட்ஜெட்டில் ரூ.698 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் முழுக்க முழுக்க ஆன்லைன் மூலம் மட்டுமே செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள் அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்றது பற்றி பள்ளிக்கல்வித்துறை சரி பார்க்க வேண்டும். மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவியர் வங்கி கணக்கு தொடங்க உயர் கல்வித்துறை வழிகாட்ட வேண்டும். மேலும் அவர்கள் ஜூன் 30-ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஒவ்வொரு 6 மாத காலம் உயர்கல்வி நிறுவனங்களில் அவர்கள் அந்த கல்லூரியில் படிப்பதற்கான சான்றளிக்கவும் அவர்களுக்கு உதவ வேண்டும். சமூக நல இயக்குனர் ஒவ்வொரு மாணவிக்கும் 1000 ரூபாய் ஊக்கத் தொகையை அனுமதிக்கவும், வழங்கவும் அதிகாரம் பெற்றுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.