Hungary: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் அறிவித்துள்ளார்.
ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் விக்டர் ஆர்பன், குறைந்து வரும் மக்கள்தொகை வளர்ச்சியை சமாளிக்க, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, ஒரு குழந்தை உள்ள பெண்களுக்கு 30 வயது வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்ற பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள்.
ஹங்கேரியில் ஏற்கனவே,நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரி விலக்கு உள்ளது. அதன் விரிவாக்கமாகவே இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.மூன்று குழந்தைகளைப் பெற்ற பெண்களுக்கு வரி விலக்குகள் 2025 அக்டோபரிலும், இரண்டு குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு 2026 ஜனவரியிலும் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, 2019ம் ஆண்டு 4 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெறும் தாய்மார்களுக்கு வருமானவரி செலுத்துவதில் இருந்து வாழ்நாள் விலக்கு என்று அறிவிக்கப்பட்ட திட்டம்தான், விரிவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரலில் இங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில், அதற்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இளம்பெற்றோருக்கு உதவுவதற்காக ஹங்கேரி அரசு ஏற்கெனவே, வட்டி இல்லா கடன், 3 குழந்தைகள் பிறந்த பிறகு கடன் ரத்து செய்யப்படும் போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.