ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்கும் வகையில், வைகை அணையில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, 15 நாட்களுக்கு 3 கட்டங்களாக நீர்திறக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்ட தேவைக்காக கடந்த 10ஆம் தேதி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட தேவைக்காக கடந்த 5 நாட்களாக திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை நிறுத்தப்பட்டது.
இன்று காலை முதல் சிவகங்கை மாவட்ட தேவைக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி, அணையில் இருந்து 2 கட்டங்களாக சிவகங்கை மாவட்ட தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிறகு 3ஆம் கட்டமாக மதுரை மாவட்ட தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 50 அடியாக உள்ளது.
அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில், தண்ணீர் திறக்கப்படுவதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதன் காரணமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்கள் ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Read More : இரவு உணவை எப்போது சாப்பிட வேண்டும்..? டைம் ரொம்ப முக்கியம்..!! லேட்டா சாப்பிட்டால் என்ன ஆகும்..?