இந்தியாவின் பெயர் பாரத் என்று மாற்றப்படுவது உறுதி. அதை விரும்பாதவர்கள் தாராளமாக நாட்டை விட்டு வெளியேறலாம் என்று மேற்குவங்க பாஜக எம்.பி. திலீப் கோஷ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கரக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மேதினிப்பூர் தொகுதி பா.ஜ எம்.பி. திலீப் கோஷ், நாங்கள் மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தால் கொல்கத்தாவில் உள்ள எல்லா வெளிநாட்டவர் சிலைகளையும் அகற்றுவோம் என்று பேசியுள்ளார். மேலும், பா.ஜவின் மற்றொரு மூத்த தலைவர் ராகுல் சின்ஹா, ஒரு நாட்டுக்கு இரு பெயர்கள் தேவையில்லை. ஜி-20 தலைவர்கள் இந்தியாவில் கூடியுள்ள இந்த சமயத்தில் இந்தியாவின் பெயரை மாற்றுவது பொருத்தமானதுதான் என்று தெரிவித்துள்ளார். இது பற்றி ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சந்தனு சென் கருத்து தெரிவிக்கையில், எங்களது ‘இந்தியா’ கூட்டணி குறித்து பயத்தில் உள்ள பா.ஜ, மக்களின் கவனத்தை திசை திருப்ப இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுகிறது என்று பதிலடி கொடுத்துள்ளார்.