தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 5 ரூபாய் என்ற அளவில் மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆவின் பால் நிறுவன நிர்வாகம் தமிழக அரசு துறையின் கீழ் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தான் ஆவின் பாலின் விலை உயர்த்தப்பட்டது. ஆவின் பால் விலை திடீர் உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது பால் விலை நூதனமாக உயர்த்தப்பட்டுள்ளது குறித்து பால் விற்பனை முகவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். அதன்படி ஆவின் பால் மூன்று நிலைகளில் வெவ்வேறு விதமான விலை நிர்ணயத்தின் படி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது கால் லிட்டர், அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் பாக்கெட்டுகளில் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் நிலைப்படுத்தப்பட்ட கால் லிட்டர் பாக்கெட் விலை ரூ.11.25 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி ஒரு லிட்டர் பால் 45 ரூபாய் ஆகும். ஆனால் இதே நிலைப்படுத்தப்பட்ட 200 மில்லி பால் பாக்கெட் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ரூ. 10 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் ஒரு லிட்டர் பால் ரூபாய் 50 ஆகும். இதன் மூலம் ஆவின் நிர்வாகம் மறைமுகமாக பாலின் விலையை உயர்த்தியுள்ளது தெரிய வருகிறது.
தமிழக அரசு ஆவின் பாலின் விலையை உயர்த்த அனுமதி மறுத்துவிட்டது. ஆனால் விற்பனையை அதிகரித்து நிர்வாகத்தின் செலவுகள் மற்றும் கொள்முதல் விலை உயர்வுகளை சமாளிக்க அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாகவே ஒரே தரத்திலான பாலின் விலை இரண்டு வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர். இந்த மறைமுக ஆவின் பால் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.