எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்த முறை லீக் சுற்றுகளில் 4 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் அரைஇறுதியில் நுழைந்தது இந்திய அணி. கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.
அடிலெய்ட் ஓவலில் நடந்த அரைஇறுதியில் இரு அணிகளும் மோதின. இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வியை சந்தித்தது இந்திய அணி. 10விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறி, வரும் 13ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.
இந்நிலையில் படுதோல்வி அடைந்த இந்திய அணியை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், “எனவே, இந்த ஞாயிற்றுக்கிழமை இறுதி போட்டியில் 152/0 vs 170/0” என பதிவிட்டுள்ளார்.
அதாவது கடந்த 2021 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி சேஸிங்கின் போது ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 152 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதே போல இங்கிலாந்து அணி தற்போது விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் அடித்து அரைஇறுதியில் வெற்றி பெற்றது. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தாமல் தோல்வி அடைந்ததை குறிப்பிடும் விதமாகவே அவர் “152/0 vs 170/0” என பதிவிட்டுள்ளார். பாக்கிஸ்தான் பிரிதமரின் இந்த பதிவு இந்தியா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.