குறுஞ்செய்தி மூலம் மின் கட்டணம் செலுத்தும் புதிய வசதியை மின் வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் மின்நுகர்வோர் தங்கள் மின் கட்டணத்தைச் செலுத்த நேரடியாக மட்டுமின்றி, இணையதளம் மற்றும் செயலி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மின்வாரியம் செய்து கொடுத்துள்ளது. இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய வசதியை மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி கைப்பேசியில் மின்வாரியம் மூலம் வரும் அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தியிலேயே மின் கட்டணத்துக்கான தொகையை எளிதாக செலுத்தலாம்.
மின்கட்டணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி நுகர்வோரின் கைப்பேசி எண்ணுக்கு வந்ததும், அதில் இருக்கும் இணைப்பை முதலில் கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு அதன் அருகில் உள்ள பெட்டியில் கேப்சா உள்ளிட வேண்டும். இதையடுத்து கட்டணம் செலுத்தும் செயல் முறை தொடங்கும். அதில் எந்த வகையில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை தேர்வு செய்து, அதன் பின்னர் மின் கட்டணத்தை செலுத்தி விடலாம். இதன்மூலம் எளிதில் மின்நுகர்வோா் தங்களுக்கான மின் கட்டணத்தைச் செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.