மழைக்காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2023 பைனல், இன்றும் மழையால் நின்றுபோனால், முடிவு என்னவாக இருக்கும் என ஐபிஎல் விதிமுறைகள் என்ன சொல்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
ரசிகர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த குஜராத் – சென்னை இடையேயான ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி கனமழை காரணமாக இன்று மீண்டும் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தநிலையில், இன்றும் மழை குறுக்கிட்டால் முடிவு என்னவாக இருக்கும் என ஐபிஎல் விதிமுறைகள் கூறுவது என்ன என்பது குறித்து இதில் பார்க்கலாம். இன்று இரவு 7:00 மணிக்கு டாஸ் வீசப்பட்டு இரவு 7.30 மணிக்கு போட்டி துவங்க உள்ளது. இருப்பினும் மழை மனது வைத்து வழிவிட்டால் மட்டுமே அப்போதும் போட்டி நடைபெறும். இல்லையேல் இதே போலவே தாமதம் அதிகரிக்க அதிகரிக்க ஓவர்கள் குறைக்கப்பட்டு முடிவு காண்பதற்கு நடுவர்கள் முயற்சிப்பார்கள். அதன் உச்சகட்டமாக இரவு 12.05 மணிக்கு குறைந்தபட்சம் தலா 5 ஓவர்கள் கொண்ட போட்டியில் நடத்தி வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு அம்பயர்கள் முயற்சிப்பார்கள்.
ஒருவேளை தொடர் மழையால் அதுவும் சாத்தியம் இல்லாமல் போனால் குறைந்தபட்சம் தலா 1 ஓவர் அதாவது சூப்பர் ஓவரை நடத்தி அதில் வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு நடுவர்கள் முயற்சிப்பார்கள். ஆனால் அதையும் நடத்துவதற்கு மழை விடாமல் போகும் பட்சத்தில் இந்த வருடம் 70 போட்டியில் கொண்ட லீக் சுற்றில் முடிவில் முதலிடம் பிடித்த அணி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு சாம்பியன் பட்டம் கொடுக்கப்படும். அந்த வகையில் 18 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் மீண்டும் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து சாதனை படைக்கும்.
இது பற்றி ஐபிஎல் விதிமுறை கூறுவது பின்வருமாறு. “ஃபைனல் போட்டியில் சூப்பர் ஓவரில் முடிவு காண முடியாமல் போனால் 70 போட்டியில் கொண்ட லீக் சுற்றின் முடிவில் டாப் இடத்தைப் பிடித்த அணி பிளே ஆஃப் அல்லது இறுதிப் போட்டியை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்” என்று கூறப்பட்டுள்ளது. அப்படி பார்க்கும் போது சென்னை இவ்வளவு தூரம் போராடி வந்தும் வெறும் கையுடன் திரும்பும் நிலைமை ஏற்பட உள்ளது. இந்தியாவுக்கு 3 விதமான உலகக் கோப்பைகளை வென்ற மகத்தான கேப்டன் தோனி சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று வெற்றியுடன் விடை பெறுவதற்கு வருண பகவான் வழி விட வேண்டும் என சென்னை ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.