சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சுரேஷ் ரெய்னா மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த 2016, 2017ஆம் ஆண்டுகளை தவிர 2021ஆம் ஆண்டு வரை விளையாடியவர் சுரேஷ் ரெய்னா. சிஎஸ்கே அணியின் சுரேஷ் ரெய்னாவின் பங்கு மறுக்க முடியாதது. ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் 3-வது வீரராக களமிறங்கும் ரெய்னாவின் அதிரடி ஆட்டம், எதிரணிக்கு பெரும் தலைவலியாக இருக்கும்.
சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் 205 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். இதில் ஒரு சதம், 39 அரைசதங்கள் உள்பட 5,528 ரன்கள் குவித்திருக்கிறார். பந்துவீச்சில் 25 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். ரசிகர்களால் சின்ன தல என்று அன்போடு அழைக்கப்படும் ரெய்னா, ஐபிஎல் வரலாற்றில் அதிக கேட்ச் (108) பிடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.
தற்போது சுரேஷ் ரெய்னா வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். அவரை சிஎஸ்கே அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே சென்னை அணிக்கு அஸ்வின் திரும்பியுள்ள நிலையில், ரெய்னாவும் சிஎஸ்கேவுடன் இணைவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More : தமிழ்நாடு முழுவதும் வெடித்தது..!! இன்று முதல்..!! மத்திய அரசை கண்டித்து களத்தில் குதித்த ஆசிரியர்கள்..!!