இறந்த மனிதனை தகனம் செய்வதில் கூட பிரச்சனையா? என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிவகாசி அருகே கீழ்திருத்தங்களை சேர்ந்த பால்பாண்டி என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி கீழ்திருத்தங்கள் கிராமத்தில் சுமார் 2 ஏக்கர் நீர்நிலையங்கள் ஆக்கிரமிப்பு உள்ளது. இந்த நீர் நிலையங்களை ஊராட்சி அமைப்புகள் ஆக்கிரமிப்பு செய்து தகன மேடை அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்கு எதிராக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதனை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, ”நமது நாட்டில் மட்டுமே அனைத்து செயல்பாட்டிற்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இறந்த மனிதனை தகனம் செய்வதில் கூடவா பிரச்சனை ஏற்படும்? என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், நீர்நிலையம் என மனுதாரர் கூறியுள்ள இடம், நீர்நிலை என இதுவரை வகைப்படுத்தப்படவில்லை. அதற்குள்ளாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது ஏற்புடையதல்ல” என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.