காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் ஏற்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்..
சமீபகாலமாக நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் H3N2 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.. இதனால், நாட்டில் பரவலாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது..எனினும் மக்கள் இதுகுறித்து பீதியடைய வேண்டாம் என்றும், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினாலே இந்த வைரஸில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..
இந்த சூழலில் புதுச்சேரியில் பரவும் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. இதே போல் தமிழகத்திலும் விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.. இந்நிலையில், காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் ஏற்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.. இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய, அவர், இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு சூழல் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். இருப்பினும் காய்ச்சல் தொடர்பாக மருத்துவத்துறை ஆலோசனையின் படி செயல்படுவோம் என்றும் அமைச்சர் கூறினார்..
மேலும் பேசிய அவர் “ பொதுத்தேர்வில் மாணவர்கள் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.. தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளி இடைநிற்றல் அதிகமாக உள்ளது.. தேர்வுக்கு பயம் காரணமாக மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லையா..? அல்லது ஆல் பாஸ் போட்டுவிடுவார்கள் என்று கருதி மாணவர்கள் தேர்வெழுதவில்லையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று ஆலோசிக்கப்பட உள்ளது.. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி, வரும் காலங்களில் இதுபோன்ப்ற சூழல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. ” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர் இறுதி தேர்வை முன் கூட்டியே நடத்தும் திட்டமில்லை என்று தெரிவித்தார்.. காய்ச்சல் காரணமாக பள்ளி தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படவில்லை. 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்றும் கூறினார்..