இந்தாண்டு கல்லூரிகளில் தங்கள் நிறுவனம் சார்பில் கேம்பஸ் இன்டர்வியூ கிடையாது என்று இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக ஐ.டி. சந்தைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்நிறுவனத்தின் சிஇஓ மற்றும் மேலாண்மை இயக்குநர் சலீல் பரேக் இதுகுறித்து பேசுகையில், தங்கள் நிறுவனத்தில் தற்போது போதிய திறமை உள்ளது.
அதே சமயம் பணிகளை 85% பணியாளர்கள் வைத்துக்கொண்டு செய்ய முடியும் சூழல் உள்ளது. இப்போதுள்ள சூழலில் இந்தாண்டு பணியமர்த்துவதற்காக நாங்கள் கல்லூரி வளாகங்களுக்குச் செல்வது சாத்தியமில்லை” என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள 1.5 மில்லியன் பொறியியல் பட்டதாரிகளில் 20 – 25% ஐடி சேவைகள் துறை நேரடியாக பணிக்கு அமர்த்துகிறது.
ஆனால், இப்போது அமெரிக்காவில் நீடிக்கும் மந்தநிலை, இந்தியாவின் பொருளாதார நிலையால் புதிதாக ஆட்களை பணிக்கு அமர்த்துவதை நிறுத்த ஐ.டி. நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. உதாரணமாக 6,333 பேரை வேலையில் இருந்து நீக்க உள்ளதாக டிசிஎஸ் சமீபத்தில் தெரிவித்தது. தொழிலாளர்கள் 7,250 பேரை வேலையில் இருந்து நீக்க உள்ளதாக இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. ஹெச்சிஎல் நிறுவனம் 2,299 பேரை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.
மைக்ரோசாஃப்ட், அசேஞ்சர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இந்த வருடம் ஊதிய உயர்வு கிடையாது என்று அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இதனால் ஐடி துறையில் மந்த நிலை தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.