பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; விவசாயிகளுக்கு இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை பாதுகாக்க திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் 2016-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்திட தருமபுரி மாவட்டத்தில் பஜாஜ் அலையன்ஸ் ஜெனால் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நெல்பயிர் காப்பீட்டு செய்ய கடைசி நாள் 15.11.2022 ஆகும். எனவே இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பெயரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கங்கள் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க ஒளி நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ளவேண்டும்.
விவசாயிகள் காப்பீடு செய்யும் போது தாங்கள் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண்கள், பரப்புகள் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து காப்பீடு செய்தப்பின் அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும். விவசாயிகள் தாங்கள் காப்பீடு செய்யும் பயிரின் பெயர், கிராமத்தின் பெயர், புல எண்கள், பரப்புகள் மற்றும் வங்கி கணக்கு எண்கள் ஆகியவை தவறுதலாக பதிவு செய்திருப்பின் காப்பீட்டு செய்யும் கடைசி தேதிக்குள் பதிவு செய்த இடத்தில் சரிசெய்து கொள்ளவும். அதன் பிறகு ஏதேனும் தவறு இருப்பின் அதை ஏற்க இயலாது. எதிர்பாராத இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை தவிர்த்திட பயிர் காப்பீடு செய்து விவசயிகள் அனைவரும் பயனடையுமாறு தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.