fbpx

’தனிநபரின் கருத்தால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல’..! – சீமான் விளாசல்

தனிநபர்களின் கருத்துக்களால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல; சவுக்கு சங்கருக்கான சிறைத் தண்டனை என்பது அதிகப்படியானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நீதித் துறை குறித்து விமர்சித்ததற்காக, தம்பி சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரின் கருத்துக்களில் பலவற்றில் முரண்பட்டாலும், அவரின் கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ‘நீதிமன்றங்கள், மக்களுக்கானதாக இருக்க வேண்டும்’ என்கிற அவரது வாதம் ஏற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.
மக்களின் கடைசி நம்பிக்கையாக இருக்கிற நீதிமன்றங்கள் எந்தத் தவறும் இழைத்துவிடக் கூடாது என்கிற நோக்கம் மிகச்சரியானது. அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்புச் சட்டம், தனிநபருக்கான கருத்துரிமையையும், நீதிமன்றத்திற்கான பாதுகாப்பையும் சமமாக உறுதி செய்கிற நிலையில், தனிநபர் ஒருவரின் கருத்தால் நீதித் துறை முற்றாகக் களங்கப்படுகிறதென்பது ஏற்கக் கூடியதாக இல்லை.

’தனிநபரின் கருத்தால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல’..! - சீமான் விளாசல்

ஒரு எளிய மகன் அதிகார வர்க்கத்தை நோக்கிக் கேள்வியெழுப்புவதும், ஆட்சியாளர்களை விமர்சனத்துக்கு உட்படுத்துவதுமான கருத்துரிமையை உறுதி செய்வதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவமாகும். உலகப் பொதுமறை தந்த தமிழ் மறையோன் வள்ளுவப் பெருமகனார் தனது குறட்பாவில், ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்’ எனக் கூறி, எதிர்நின்று எவருமே கேள்வி கேட்க முடியாத பெரும் எதேச்சதிகாரப்போக்கால் கட்டமைக்கப்பட்ட முடியாட்சியிலேயே ஆளும் அரசனின் குறைகளையும், குற்றங்களையும் சுட்டிக்காட்ட வேண்டும்; இல்லாவிட்டால், அந்த ஆட்சியதிகாரம் வீழுமென்கிறார்.

’தனிநபரின் கருத்தால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல’..! - சீமான் விளாசல்

மக்களால் தேர்வு செய்யப்படாத மன்னராட்சியே விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு, அதன் குற்றம், குறைகள் யாவும் அலசித் தீர்க்கப்பட வேண்டுமென்றால், மக்களாட்சியால் நிர்மாணிக்கப்பட்ட அரசாங்கக் கட்டமைப்பும், நால்வகைத் தூண்களான சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை, ஊடகங்கள் ஆகியவையும் விமர்சனத்திற்கு உட்பட்டுத்தானே ஆக வேண்டும். அவற்றை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகக் கட்டமைப்பது எந்த வகையில் நியாயம்? எந்த அடிப்படையில், ஜனநாயகத்தின் மிக முக்கிய அவலங்கங்களுள் ஒன்றான நீதித் துறையின் மீது எழுப்பப்பட்டக் கேள்விகளுக்காக சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறைத் தண்டனை என்பது அதிகப்படியானது என்றே எண்ணுகிறேன்.

சவுக்கு சங்கரின் கருத்துகளில் தவறு இருப்பதாக நீதிமன்றம் கருதினால், அது தனக்குண்டான கட்டற்ற அதிகாரத்தை உணர்ந்து, கண்டனத்தோடும், எச்சரிக்கை செய்தும்கூட இவ்வழக்கைக் கையாண்டிருக்கலாம். கடந்த காலங்களில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, ‘தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் வரவில்லை; அடுத்தவர் காலை பிடித்தே வந்திருக்கிறார்கள்’ என மிக இழிவாகவும், பல அரசியல் உள்காரணங்களோடும் கருத்துதிர்த்தபோது அவமதிப்புக்குள்ளாகாத நீதிபதிகளும், நீதித் துறையும், சவுக்கு சங்கர் கூறிய கருத்துகளினால் எப்படி மாண்பிழந்து போவார்கள்?

ஜனநாயகத்தில், இந்த இடத்தில் விமர்சனத்திற்கு உட்பட்டவர், இந்த இடத்தில் இருப்பவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று எந்த வரையறையும் கிடையாது. இந்த நாட்டில் நீதிமன்றங்கள் இதுவரை பிழையே இழைத்ததில்லை என்று யாராவது கூறமுடியுமா? நீதிமன்றத்திற்கு நீதிமன்றம் நீதி மாறுபடும்போது, ஒரு நீதிபதியால் வழங்கப்படும் நீதி, மற்றொரு நீதிபதியால் மாற்றப்படும்போது, நீதித் துறை எப்படி விமர்சனத்திற்கு ஆளாகாமல் இருக்க முடியும்? இன்றைய நீதிபதிகள், வழக்கறிஞர்களாக இருந்த கடந்த காலங்களில், ‘நீதிபதிகள் ஒன்றும் கடவுள்கள் அல்ல’ என்று விமர்சித்த வரலாற்றை மறுக்க முடியுமா? நீதி தவறினால் உடனே உயிரை மாய்த்துக் கொள்ள இன்றைக்கு நீதித் துறையில் உள்ளவர்கள் அனைவரும் நீதி வழுவா பாண்டிய நெடுஞ்செழியர்களா? அல்லது மகன் மீது தேரேற்றி மாட்டுக்கு நீதி சொன்ன மனுநீதிச் சோழர்களா?

ஆகவே, சவுக்கு சங்கரின் அடிப்படையான நோக்கத்தையும், தனிநபர் ஜனநாயக உரிமையைக் கருத்தில் கொண்டும் அவருக்கு வழங்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை, உயர்நீதிமன்றம் மறுபரிசீலனை செய்து அவரை விடுவிக்க வேண்டுமெனக் கோருகிறேன்” என்று அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

’தினகரனோடு சேர்ந்து பாழாய்போன ஓபிஎஸ்’..! பாட்டு பாடி கலாய்த்த ஜெயக்குமார்..!

Fri Sep 16 , 2022
“தினகரனோடு சேர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பாழாய் போய்விட்டார்” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சுதந்திர போராட்ட தியாகியும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஓ.பன்னீர்செல்வம் என்பவர் ஒரு கோஷ்டி என்றும் அவர் கட்சி அல்ல என்றும் சாடினார். கோஷ்டிக்கும் கட்சிக்கும் வித்தியாசம் […]
’தினகரனோடு சேர்ந்து பாழாய்போன ஓபிஎஸ்’..! பாட்டு பாடி கலாய்த்த ஜெயக்குமார்..!

You May Like