இலங்கை நாட்டில் முதல்முறையாக இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் நடக்கும். மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகெங்கும் புகழ்பெற்றவை. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் கூட மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பார்க்கப் பார்வையாளர்கள் குவிவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்துள்ள தச்சங்குறிச்சி என்ற இடத்தில் நடக்கிறது. இதற்கிடையே முதல்முறையாக இலங்கையிலும் இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது. கடந்த ஆண்டு திருச்சி வந்த போதே இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரான செந்தில் தொண்டமான், இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் எனக் கூறியிருந்தார். அதன்படி இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது.
ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் சுற்றுலாத் துறை சார்பில் அங்கே பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரம் இந்த பொங்கல் விழா நடக்கும் நிலையில், முதல் நாளான இன்று திரிகோணமலை, சம்பூர் பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 200 காளைகளும், 100-க்கும் மேற்பட்ட வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.