நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தோல்வி பயத்தால், தங்கள் உயிரை மாய்த்து கொள்வது தீர்வாகாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்தும் வாகனம் இல்லா போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டமான ’ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் திட்டம்’ சென்னையில் உள்ள 8 இடங்களில், ஒரு வருடத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் முதன் நிகழ்ச்சி சென்னை அண்ணா நகர் 2-வது அவென்யூவில், உள்ள பிரதான சாலை 800 மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் செல்லாத வகையில் பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “உடற்பயிற்சிக்கும், மகிழ்வான வாழ்வுக்கும் இந்த நிகழ்வு ஒரு எடுத்துகாட்டாக அமையும் என்றார். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுப்பதாக கேட்டுக்கொண்ட அவர், உயிரை மாய்த்து கொள்வது தீர்வாக அமையாது என்றும் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக இருக்கும்” என்றும் நம்பிக்கையளித்தார்.