பிரிட்டனை சேர்ந்த பெண்ணின் வீட்டில் இருந்து ரூ.247 கோடி மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற நிலையில், துப்பு கொடுத்தால் ரூ.57 கோடி சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்முலா ஒன் கார் பந்தைய போட்டிகளை நடத்தும் நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபர் பெர்னி எக்லெஸ்டோன் என்பவரது மகள் தமரா. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு தனது கணவர், மகளுடன் லண்டனில் இருந்து பின்லாந்துக்கு தனி விமானத்தில் சென்றுள்ளார். அதேநேரத்தில் லண்டன் வீட்டில் மிகப்பெரிய திருட்டு நடந்துள்ளன. வீட்டின் ஒவ்வொரு அறையையும் கொள்ளையர்கள் சூறையாடியதுடன், விலை உயர்ந்த நகைகள், கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.247 கோடி எனக் கூறப்படுகிறது.

திருட்டு நடந்து 3 ஆண்டுகள் ஆகியும் கொள்ளையடித்தது யார் என்பது குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால், விரக்தி அடைந்த தமரா, ‘தனது நகைகளை சட்டப்படி மீட்க நீண்ட நாட்கள் காத்திருந்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை’ எனக்கூறி புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்த துப்பு கொடுப்போருக்கு நகைகள் மீட்கப்பட்டால், மீட்கப்பட்ட நகைகளின் மதிப்பில் 25 சதவீதம் அல்லது ரூ.57 கோடியை சன்மானமாக வழங்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த மிகப்பெரிய திருட்டு சம்பவத்தில் இதுவரை ஒரே ஒரு ஜோடி தோடு மட்டுமே மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.