உலகம் முழுவதும் கடந்த ஒரே மாதத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘உலகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சமீபகாலமாக புதிய வகை உருமாறிய கொரோனா ‘ஜெஎன்.1’ மற்றும் ஒமைக்ரான் ‘பிஏ.2.86’ வேகமாக பரவி வருகின்றது.
இந்தியாவிலும், ‘ஜெஎன்.1’ கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 28 நாள்களில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 8.50 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 752 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3420ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் தொற்று பாதித்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.