கேரளா மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி தனது ஸ்கூட்டியில் வெளியே சென்றுள்ளார். அவர் இடுக்கி பகுதிகளில் இருக்கும் சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற நிலையில், அங்குள்ள டிராபிக் சிக்னலில் இருக்கும் சிசிடிவி கேமராக்களில் அவர் ஹெல்மெட் அணியாமல் சென்றது பதிவாகியுள்ளது. ஹெல்மெட் அணியாமல் சென்றது மோட்டார் வாகன சட்டத்தின் படி விதிமீறல் என்ற நிலையில், சிசிடிவி புகைப்படங்களை போக்குவரத்துத் துறை வீட்டிற்கு அனுப்பி அபராதத்துடன் கட்டுமாறு கூறியுள்ளது. இங்கு தான் அந்த நபரின் வாழ்க்கையில் விதி விளையாடியுள்ளது. அந்த ஸ்கூட்டியின் ஆர்சி உரிமம் அந்த நபரின் மனைவியின் பேரில் உள்ளது.
எனவே, அந்த புகைப்படம் மற்றும் அபராதம் வீட்டில் உள்ள மனைவிக்கு செல்போனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த மனைவி பெரும் அதிர்ச்சி அடைந்தார். காரணம், அந்த ஸ்கூட்டியில் கணவர் தனியாக செல்லவில்லை. வேறு ஒரு பெண்ணுடன் வெளியே சுற்றியுள்ளார். இதுகுறித்து தனது கணவரிடம் புகைப்படத்தை காட்டி யார் அந்த பெண் என மனைவி கேட்டுள்ளார். அதற்கு கணவர், பெண்ணுக்கு லிப்ட் தான் கொடுத்தேன் யார் எனத் தெரியாது எனக் கூறி சமாளித்துள்ளார். ஆனால், மனைவிக்கு அந்த பதில் திருப்திகரமாக இல்லை. கணவரை தொடர்ந்து விசாரிக்கவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், தன்னையும் தனது 3 வயது குழந்தையையும் கணவர் தாக்கியதாகக் கூறி மனைவி காவல்துறையிடம் புகார் அளித்தார்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, கணவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. தொடர்ந்து நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஹெல்மெட் போடாமல் பைக்கில் சென்று சிசிடிவி கேமராவில் மட்டும் இல்லாமல் தனது மனைவியிடமும் சேர்ந்து மாட்டிக்கொண்ட கணவர் தற்போது சிறைக் கம்பிகளை எண்ணுகிறார்.