சென்னையின் புறநகர் பகுதியான படப்பையின் காந்தி நகரில் சிவா (30) பூமாதேவி (26) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு லோகேஷ்வரி (8) என்ற மகளும், சதீஷ் (6) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பூமாதேவிக்கு, ஒரத்தூரை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் வேலை செய்யும் சுந்தருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. மனைவியின் கள்ளத்தொடர்பு குறித்து கணவன் சிவாவுக்கு தெரியவந்தது.
இதனால், வீட்டில் கணவன் – மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தொடர்ந்து தகராறு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து கடந்த 3 மாதங்களுக்கு தனியாக வசிக்கத் தொடங்கினர். இந்நிலையில், நேற்று முந்தினம் இரவு பூமாதேவி, கள்ளக்காதலன் சுந்தருடன் பைக்கில் சென்றுள்ளார். இதனைக்கண்ட, கணவன் சிவா தனது பைக்கில் அவர்களை பின்தொடர்ந்து விரட்டிச்சென்று மனைவி பூமாதேவியை பிடித்து இழுத்தார். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த பூமாதேவிக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து, கள்ளக்காதலன் சுந்தர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். ஆனால் மனைவியை, சிவா தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பூமாதேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், பூமாதேவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிவாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.