கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் அவரின் தாய்க்கு அரசு வேலை வழங்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், மாணவி பயின்ற சக்தி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி சூறையாடப்பட்டது. அப்பள்ளியின் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமின்றி பள்ளி அலுவலகத்தில் இருந்த மாணவர்களின் சான்றிதழ்கள் உள்ளிட்டவையும் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால், அங்கு படித்து வந்த மாணவ, மாணவியர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “முதலமைச்சர் அறிவுறுத்தல்படி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பள்ளியை நேற்று ஆய்வு செய்தோம்.

நீதிமன்ற வழக்கு காரணமாக பெற்றோரை நேரில் சந்திக்க முடியவில்லை. இறந்த மாணவியின் தாய் எம்.காம் படித்துள்ளார். அவர் கேட்டுள்ளபடி, அவருக்கு பணி வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். பள்ளியில் சான்றிதழ் எரிந்துள்ளது என்றும், அருகில் உள்ள தனியார் பள்ளிகள் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு உதவ தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர். நாற்காலி உட்பட அனைத்தும் தூக்கிச் செல்லப்பட்டுள்ளன. முதலமைச்சருடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், நாங்கள் பள்ளியில் நடந்தது என்ன?, தீர்வு என்ன?, மாணவர்களின் பெற்றோர் மனநிலை என்ன? என்பது குறித்து கூற உள்ளோம். அதனை தொடர்ந்து முதலமைச்சர் அறிவுறுத்தல் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

சான்றிதழ் எரிந்ததை பலர் அழுதபடி எங்களிடம் காட்டினர். சான்றிதழ்களில் புகை வாடை இப்போதும் வருகிறது. ’கள்ளகுறிச்சி பள்ளியில் திட்டமிட்டு கலவரம் நடந்துள்ளது; கோபத்தில் ஏற்படவில்லை’ என நீதிமன்றமே கூறியுள்ளது. மாற்றுச் சான்றிதழ்கள் மட்டுமின்றி பிறப்பு சான்றிதழ் உட்பட மாணவர்களின் பல சான்றிதழ்கள் எரிந்துள்ளது. எனவே, வருவாய் துறை மூலம் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்து கொடுப்போம். மாணவர்களுக்கு டூப்ளிகேட் டிசி எளிதில் வழங்க முடியும். மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்படாமல் இருப்பது தொடர்பாக முதலமைச்சருக்கு அறிக்கை வழங்க உள்ளோம். மாணவியின் அருகில் அமர்ந்து படித்த ஒரு மாணவி அந்த பள்ளியிலேயே படிக்க விரும்புவதாகக் கூறினார்.
மாணவி இறந்து 24 மணி நேரத்திற்குள் துறை ரீதியான விளக்கம், மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டு விட்டது. அந்தப் பள்ளியின் அருகே 5 அரசுப் பள்ளி, 17 தனியார் பள்ளிகள், 2 கல்லூரி இருக்கிறது. இதை, சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பயன்படுத்த முடியுமா? என முதலமைச்சரிடம் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்போம்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.