நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனை நடந்த நிலையில், மற்ற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் கோவை மற்றும் தென் சென்னை தொகுதிகளை கேட்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்திருக்கிறாராம். கமல்ஹாசன் கோவை அல்லது தென் சென்னை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார் என்றும் நாளை, நாளை மறுநாள் நிர்வாகிகளுடன் ஆலோசனைக்குப் பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.